சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நீக்கப்பட்ட ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசல்ஸின் இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவை மேற்கோள் காட்டிய ஊடக அறிக்கை ஒன்றில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள வன்னி மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் காலம் மேலும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் பின்னரே குடியமர்த்தப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டி வருவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டாவை ரத்துசசெய்ய எடுத்த தீர்மானமானது ஒருபக்க சார்பானது. அவ்வாறு மேற்கொள்வது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளமுடியாதது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுபிரிவான "றோ" அங்கே அலுவலகம் திறந்து தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும் தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே என புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேச நிர்மான அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணாவிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதாக லக்பிம பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.